தொண்டியில் புதிய INDIA 1™ ATM பாதுகாப்பானதா !?
நமது தொண்டியில் கடந்த செவ்வாய் முதல் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் INDIA1™ என்ற பெயரில் புதிய தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ATM) அமைக்கப்பட்டு இயங்கத் துவங்கி உள்ளது.
ஏற்கனவே நமது தொண்டியில் ஐந்து (பணமே இருக்காத) ஏடிஎம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் வங்கிகளோடு இணைந்தே உள்ளன.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏடிஎம் எந்த வங்கியோடும் இணைந்தது அல்ல..!!
அப்படியானால் இது பாதுகாப்பானதா ?! இவர்கள் யார் !? என்ன லாபம் !? என பல கேள்விகள் எழுகின்றன.
அவற்றிற்கான பதில்களை அலசுகிறது MyThondi.Com ன் இப்பதிவு..!!

=============================
# யார் இவர்கள் !?
India One™ என்பது BTI PAYMENTS LTD., என்ற தனியார் நிதி நிறுவனம் நடத்தும் WHITE LABEL ஏடிஎம் ஆகும்.
(WHITE LEBEL என்பது வங்கிகள் அல்லாத நிறுவனங்களால் நடத்தப்படும் ஏடிஎம்களுக்கு கூறப்படும்.)
# தனியார் என்றால் அரசு அங்கீகாரம் உண்டா !?
கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி கிராமப்புற பகுதிகளில் ஏடிஎம் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 10 தனியார் நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கியது. அதில் ஒன்று BTI PAYMENTS LTD., ஆகும்.
எனவே RBI ன் வழிகாட்டல் படியே இந்த ஏடிஎம்கள் இயக்கப்படுகின்றன.
# இதனால் இவர்களுக்கு என்ன லாபம் !
வியாபாரிகள் லாபமில்லாமல் ஏதாவது தொழில் செய்வார்களா !?! லாபம் கண்டிப்பாக உண்டு.
நாம் நமது ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கவோ (Cash Withdrawal), அல்லது கணக்கு சரிபார்க்க (Balance Enquiry), பின் எண்னை மாற்ற (PIN Change) என ஏதேனும் பரிவர்த்தனை (Transaction) செய்ய வேண்டும் எனில் நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தில் செய்தால் மட்டுமே அது இலவசம்.
வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் செய்தால் அந்த ஏடிஎம் சேவை வங்கி/நிறுவனம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சேவை கட்டணம் (Service Charge) வசூலிக்கும்.
அந்த கட்டணத்தில் முதல் ஐந்து தடவைகள் நமக்காக நமது வங்கியே செலுத்தும். அதாவது 5 தடவைகள் நமக்கு இலவசம். ஒரு மாதத்திற்கு 5 பரிவர்த்தனை முடிந்து அதன்பின் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைக்கு உங்கள் கணக்கில் பணம் பிடிக்கப்பட்டு ஏடிஎம் சேவை நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
# பணம் எடுத்தால் கட்டணம். பேலன்ஸ் பார்த்தாலும் கட்டணம் உண்டா !?
நாம் மேலே சொன்ன பரிவர்த்தனை என்பது 1. பணப் பரிவர்த்தனை (Cash Transaction) , 2. பணமற்ற பரிவர்த்தனை (Cashless Transaction) என இரண்டாக பிரித்துள்ளனர்.
பணப் பரிவர்த்தனை என்பது பணம் எடுப்பது, பணம் போடுவது போன்றவை.
பணமற்ற பரிவர்த்தனை என்பது இருப்பு விசாரணை, பின் நம்பர் மாற்றம், பணம் மாற்றுதல் போன்றவை.
இவை அனைத்துமே பரிவர்த்தனையாக கவனிக்கப்படும்.
பணப் பரிவர்த்தனைக்கு ₹15 (+ வரி) என்றும் பணமற்ற பரிவர்த்தனைக்கு ₹5 (+வரி) என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முதல் ஐந்து தடவைகளுக்கு இவை முற்றிலும் இலவசம் தான்.
# வங்கிகள் இருக்கும்போது இது போன்ற தனியார் ஏடிஎம் கள் ஏன் !?
வங்கிகள் பணப் பரிமாற்றம், கடன்கள், நகை அடமானம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வரும் சூழ்நிலையில் ஏடிஎம் பயன்பாடு மற்றும் பராமரிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது.
நமது தொண்டியில் உள்ள 5 ஏடிஎம்களே பல நேரங்களில் மூடப்பட்டு கிடப்பதே அதற்கு சாட்சி.
எனவே கிராமப்புற பகுதிகளில் வங்கிகள் ஏடிஎம் சேவையை பெரும்பாலும் சரியாக அளிப்பதில்லை.
எனவே, அந்த குறையை சரிசெய்ய இது போன்ற தனியார் ஏடிஎம்களின் தேவை உள்ளது.
தற்போது கூட நமது தொண்டியில் அமைக்கப்பட்டுள்ள INDIA 1 ATM உப்பூர், திருப்பாலைக்குடி, இராமேஸ்வரம் போன்ற இடங்களில் ஏற்கனவே செய்லபட்டு வருகிறது.
அடுத்து SP பட்டிணம், திருவாடானை போன்ற இடங்களில் அமைக்கப்படவிருக்கிறது.
# இவை பாதுகாப்பானதா !?
BTI நிறுவனம் தனது இணையதளத்தில் இது முழுமையாக பாதுகாப்பானது என்றே குறிப்பிட்டுள்ளது. RBI ன் நேரடி கண்காணிப்பில் இவைகள் உள்ளன. எனவே பாதுகாப்பு அம்சங்கள் நிறைவாகவே செய்யப்பட்டிருக்கும்.
என்றாலும் மற்ற ஏடிஎம்களைப் போன்று இதில் ₹4500 க்கு மேல் பணம் எடுக்க முடியாது.
5 தடவைக்கு மேல் கட்டணம் என்பன போன்ற சில அசௌகரியங்களும் உண்டு என்பதே உண்மை. ஆனால் அவசரமாக பணம் வேண்டும் என்ற நிலையில் இவைகளை சகித்துக்கொள்ள தான் வேண்டும்.
============================
வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழே உள்ள படிவத்தில் உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்பலாம்.
MyThondi.Com™ News Team.