மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் :-

மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை.
விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய டீசல் வழங்கப்படாது எனவும் கூறி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மீன்துறை அதிகாரிகள் மானிய டீசலை நிறுத்தி வைத்துள்ளனர்.

இரும்பால் ஆன 10 விசைப் படகுகளுக்கும் உடனடியாக மற்ற படகுகளை போல் மானிய டீசல் வழங்க கோரி நேற்று முதல் பாம்பனில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Leave a comment