இன்று முதல் மதுக்கடைகளை ஆந்திர அரசே ஏற்று நடத்தும் நிலையில் கடை திறப்பு நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டது. இதன்படி, அக்டோபர் 1ம் தேதி (இன்று) முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் ஒரு கட்டமாக கிராம பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்கப்படும் சிறிய கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
ஆந்திராவில் 4,377 மது விற்பனை செய்வதற்கான கடை உரிமத்தை தனியாருக்கு அரசு வழங்கியிருந்தது. இந்த உரிமம் வழங்கப்பட்ட கடைகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கலால் துறை முதன்மைச் செயலாளர் சாம்பசிவராவ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் இன்று முதல் அரசே மதுபானங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள மதுக்கடைகளில் 20 சதவீதம் குறைத்து, மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 4,377 மதுக்கடைகளில், 876 கடைகள் குறைக்கப்பட்டு, 3504 கடைகள் அக்டோபர் 1ம் தேதி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும், ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி ஆந்திர அரசு விதித்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசே மதுபானங்களை விற்பனை செய்தாலும் கலால் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நகரப்பகுதிகளில் ஒரு கடைக்கு நான்கு ஊழியர்களும், கிராமப்பகுதிகளில் ஒரு கடைக்கு 3 ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தகவல் : Nermai.Com
தொகுப்பு
My Thondi.Com Team