உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

இராமநாதபுரம் | செப் 27 – 2019

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் உப்பூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை பெல் (BHEL) நிறுவனம் துவங்கியுள்ளது.

₹12655 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளை 2019 டிசம்பர் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மின் நிலையத்திற்கு 359 ஏக்கர் இடம் கையகப்படுத்திய விவகாரத்தில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பணிகள் தாமதமாகியது.

தற்போது கடல் நீர் வெளியேற்றும் மற்றும் உள் இழுக்கும் குழாய்களை கடலுக்கு மேலே 7 கிலோமீட்டர் தூரம் பாலம் அமைத்து பதிக்கும் பணிகளை தடை செய்ய முள்ளி முனை கிராம மக்கள் போராடி வருவதால் அந்த பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

எனவே அனல் மின் நிலைய நிறைவு காலத்தை அதிகாரிகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்திருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போது 800 மெகாவாட் உற்பத்தி திறன் உள்ள இரண்டு கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை BHEL நிறுவனம் துவங்கியுள்ளது.

இதற்கென முதற்கட்டமாக பிரத்யேகமான 166 (83 + 83) தூண்கள் அமைக்கும் பணிகளை நிறுவனம் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a comment