கீழடி சாதனை நாயகி – கனிமொழி மதி

சென்னை | செப் 27 – 2019

இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுகாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.

இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி அகழ்வாய்வை, தமிழக அரசே நடத்தவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க இடம் ஒதுக்கப்படவும் கனிமொழி மதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கும் முக்கிய பங்காற்றியது.

கீழடி நாகரிகம்

கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதில் முக்கியமான பங்காற்றியுள்ள வழக்கறிஞர் கனிமொழி மதி கீழடியில் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருந்த போதுதான், அது பற்றிய செய்திகள் வெளிவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார்

திண்டுக்கல் பக்கத்திலுள்ள கிராமம் ஒன்றுதான் சொந்த ஊர் என்பதால் மதுரை பக்கத்திலுள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றவுடன் இவருக்கு ஆர்வம் மேலிட்டுள்ளது.

பழங்கால நாகரிகம் என்றால் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பற்றி நாம் படித்திருக்கிறோம். கீழடியில் கட்டட சுவர்கள் கண்டுபிடிக்க்பபட்டுள்ளன என்று கேள்விப்பட்டபோது வரலாற்று மாணவியான கனிமொழி மதிக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது.

கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்துள்ளார்.

இதற்குப் பிறகு நடக்கும் தொல்லியல் ஆய்வுகளில் இன்னும் அதிகமானவை கண்டுபிடிக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், அகழ்வாய்வு தொடராமல் இருந்ததும், கீழடியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்காமல் எடுத்து செல்ல முற்பட்டதையும் பார்த்து கனிமொழி மதி ஆதங்கப்பட்டிருக்கிறார்.

எனவே இதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் வெற்றியும் கண்டார்.

அதன் பிறகே தமிழக அரசு கீழடி மீது கவனம் செலுத்தி முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

கீழடியைப் பற்றி பெருமையாக உணரும் ஒவ்வொரு தமிழனும் வழக்கறிஞர் கனிமொழி மதி அவர்களை பாராட்டி ஆக வேண்டும்.


தொகுப்பு

My Thondi.Com Team

Leave a comment