“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 7
தேதி : 21-09-2017
…..……………………………………….
நீதியின் குடையின் கீழ் இந்தியா
மாமன்னர் ஔரங்கஜேப்
மாமன்னர் ஔரங்கஜேப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள். மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.
அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஔரங்கஜேப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?
இந்து கோயில்களுக்கு மானியம்
ஔரங்கஜேப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம், சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஔரங்கஜேப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.
தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஔரங்கஜேப் உதவினார். ஔரங்கஜேப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஔரங்கஜேப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
ஔரங்கஜேப்பின் தாராள மனப்பான்மை
ஔரங்கஜேப் ஒரு முஸ்லிம் என்பதால், “உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு” என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஔரங்கஜேப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஔரங்கஜேப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஔரங்கஜேப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.
தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஔரங்கஜேப் கவனமாக இருந்தார். ”பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது” என்று ஆணையிட்டார்
”ஔரங்கஜேப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது” என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஔரங்கஜேப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.
பேரரசர் ஔரங்கஜேப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஔரங்கஜேப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஔரங்கஜேப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை.
இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஔரங்கஜேப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஔரங்கஜேப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஔரங்கஜேப்பை வேண்டினர்.
மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்துவிட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத தோஷம்பட்டக் கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஔரங்கஜேப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.