“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 3
நாள் : 11-09-2017
………
சிந்துவில் தோன்றிய முதல் பேரொளி.
- வடக்கில் இஸ்லாம்
அரபு வியாபாரிகளிடமிருந்து இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட மக்களின் மூலம் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாம் பரவத்தொடங்கியிருந்தது. இஸ்லாமிய மார்க்கத்தின் நற்சிந்தனைகள், ஒழுக்கங்களைக் கண்ட மக்கள் அணிஅணியாக இஸ்லாத்தினுள் வந்தனர்.
அதே சமயத்தில் இந்தியாவின் வட பகுதியிலும் இஸ்லாமியத் தளபதி முஹம்மது பின் காஸிமின் வருகையால் இஸ்லாம் உதித்தது.
முஹம்மது பின் காஸிம்
முஹம்மது பின் காஸிம் கி.பி 695ஆம் ஆண்டு தாயிஃப் எனும் ஊரில் பிறந்தார். பனூ உமைய்யா ஆட்சியின் போது ஈராக் பகுதிகளின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவரின் உறவினராவார்.
மிகுந்த நீதமும் இஸ்லாமியப் பற்றும் கொண்ட இவர் சிறு வயதிலேயே வீர தீரத்தில் சிறந்து விளங்கினார்.
வருகையின் காரணம்
அன்றைய இஸ்லாமியப் பேரரசு வியாபார ரீதியில் உலகின் பல நாடுகளோடு தொடர்புகொண்டிருந்தது. கி.பி 8ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இஸ்லாமியப் பேரரசுக்கும்வ இலங்கை அரசுக்குமிடையில் வணிக ரீதியிலான கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
கப்பல் பயண வழியில் சிந்து நதி கரைப்பகுதியில் இருந்த மக்கள் அரபு வணிகர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது அப்பகுதியின் அரசராக இருந்தவர் இராஜா தாகீர் ஆவார்.
கி.பி 710 ல் அரசரின் கவர்னராக இருந்த பிரதாப் ராய் என்பவன் இலங்கையிலிருந்து திரும்பிய அரபு வணிகக் கப்பல் ஒன்றை தாக்கி அதிலிருந்த விலைமதிக்க முடியாத செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்து பல அரபுப் பெண்களையும் கடத்திச் சென்று அடைத்துவைத்து விட்டான். அப்பெண்கள் இஸ்லாமிய கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிற்கு அபயம் தேடி கடிதம் எழுதினர்.
இஸ்லாமிய கவர்னர் ஹஜ்ஜாஜ், அப்பெண்களை விடுவிக்குமாறு இராஜா தாகீரிடம் வேண்டிக் கொண்டபோதிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அப்பெண்களை விடுவிக்க தளபதி முஹம்மது பின் காஸிம் தலைமையில் ஒரு படை புறப்பட்டது.
சிந்து மக்களின் ஆதரவு.
தளபதி முஹம்மது பின் காஸிம் தலைமையில் இஸ்லாமியப் படை கி.பி 711 ல் சிந்து நதிக்கரையில் வந்திறங்கியது.
ரோர் )Rohri) என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் இராஜா தாகீரும் அவரது படைகளும் தோற்கடிக்கப்பட்டனர்.
பிராமண அரசரான இராஜா தாகீரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களும் புத்தர்களும் கூட இஸ்லாமியப் படைக்கு உதவிகள் செய்தனர்.
இராஜா தாகீரின் ஆட்சியிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டனர். அங்கு நிம்மதியான இஸ்லாமிய ஆட்சிமுறை நிறுவப்பட்டது. அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் விரும்பும் மத்த்தை பின்பற்றி வாழ முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அனைவரின் உயிர் உடமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு இஸ்லாமிய அரசுக்குரியது என பகிரங்கமாக பிரகடனம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய அரசின் உயர்ந்த நற்குணங்களைக் கண்ட பலர் விரும்பி இஸ்லாத்தை ஏற்றனர். இவ்வாறு முதன்முதலில் வடக்கில் இஸ்லாத்தின் பேரொளி பரவ ஆரம்பித்தது.