“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 5

தேதி : 18-09-2017

………………………………

ஐரோப்பியர்களின் வருகை

கி.பி 1492 ல் வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் முதன்முதலாக போர்ச்சுகீசியர்கள் இன்றைய கேரளாவின் கோழிக்கோடு கடற்கரைப் பகுதியில் வந்திறங்கினர். இதுவே ஐரோப்பியர்களின் முதல் ஊடுருவல் ஆகும்.

 ஐரோப்பியர்களின் நாடு பிடிக்கும் நடத்தையை ஏற்கனவே அறிந்திருந்த அங்கிருந்த அரபு வணிகர்கள் அப்பகுதியின் மன்னராக இருந்த சாமுத்ரியிடம் இவர்களை வியாபாரத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆயினும் மன்னர் சாமுத்ரி  போர்ச்சுகீசியர்கள் தருவதாக வாக்களித்த சில அற்பப் பணங்களுக்காக அவர்களுக்கு நம் நாட்டில் தங்கி வணிகம் செய்ய அனுமதியளித்தார்.

நாட்டின் வளத்தைக் கண்டு பேராசைக் கொண்ட ஐரோப்பியர் படிப்படியாக நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர்.

முதல் தளபதி குஞ்சாலி மரைக்காயர் 

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், 

அந்நியரை காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்.

என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கி.பி.1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயார் செய்தார். கி.பி.1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

கி.பி.1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்ச்சுக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார். 
முதல் வெற்றி

கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார். 

கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார். 

கி.பி.1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார். 

இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். 1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார். 

இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572 ல் பரங்கியர் படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் ஐரோப்பியர் படையை வெற்றி கொண்டார்.
சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு! 
1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சாமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார். 

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா? 

ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், “கப்பலோட்டிய தமிழன்” பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.

Leave a comment