“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 12

தேதி : 29/09/2017

…………………………………….

12 – ஏன் கேட்டார் தனி நாடு ?

தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா சாஹிப் பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 

1937 க்குப் பின் ஆட்சிப் பொறுப்பை  ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார். சர். சிம்மன்லால் சிடால்வாட்.

லிபரல் பார்டியின் தலைவரும் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவருமான சிடால்வாட் தனது Recollection and Reflections” என்ற நூலில், Congress parentage of partitio (பக் 414) என்ற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.

    “பாகிஸ்தான் இயக்கத்திற்கு முலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஆட்சிக்கு வந்தபொழுது நடந்துக் கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்ப்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை” என்கிறார்.

    வட்டமேஜை மாநாட்டில் மாகாண மந்திரிச் சபைகளில் சிறுபான்மை பிரதிகளையும் சேர்த்துக் கொள்வதென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகாணங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக மாறினாலே தவிர மந்திரி பதவி இல்லை. என காங்கிரஸ் கூறி விட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனைப் பற்றி டாக்டர். அம்பேத்கார் குறிப்பிடும் போது “காங்கிரஸ் அனுசரித்த போக்க விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதரக் கட்சிகளையெல்லாம் நிர்முலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாகச் செய்வதற்கே இந்த முறைக் கையாளப்பட்டது. ஒரு ஏகாதிபத்திய யதேச்சதிகார அரசாங்கத்தை நிறுவச் செய்யப்படும் இம்முயற்சியை ஹிந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம். ஆனால் இது சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்” எனக் கண்டித்துக் கூறுகிறார்.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப் பற்றியோ, கலீபாக்களைப் பற்றியோ மற்றும் முஸ்லிம் சம்பந்தமான விஷயங்களோ பாடத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம் ஒரே அடியாக அழிந்துவிடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர். ( Sir Regined Coupland. The Indian problem.)

    இவ்வாறு காங்கிரஸ் நடந்துக் கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா சாஹிப் பூரண சுயஆட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொருப்பில் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இளைத்தால் பரிபூரண சுயாட்சிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல் ஆதரித்தார். எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை.

நேருவின் பேட்டியால் நிலை மாறியது

    ஒன்றுப்பட்ட இந்தியாவில் மாகாண சுயாட்சி என்ற அடிப்படையில் மாகாணங்களைப் பிரிக்கலாம் என 1946ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்ட கேபினேட் தூதுக் குழுவின் முடிவினை ஜுன் மாதம் 6ம் தேதி கூடிய முஸ்லிம் லீக் கவுன்ஸில் ஜின்னா சாஹிபின் ஆலோசனையின் படி ஏற்றுக் கொண்டது. 1940ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையைக் கைவிட தயாரானது. ஆனால் ஜுலை 10ம் தேதி நேரு அவர்கள், கேபினெட் குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு அதிகாரம் உண்டு என்ற ரீதியில் அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும காங்கிரஸை நம்பத் தயாராக இல்லை. தனிநாடுதான் தீர்வு என முடிவாக ஜின்னா கூறி விட்டார்.

    “நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. என மெளலானா அபுல்கலாம் ஆஜாத் தனது India wins freedom என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

    மேற்க்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னா சாஹிபும் முஸ்லிம் லீகும், முஸ்லிம்களும் பிரிவினையை நிர்ப்பந்த சூழ்நிலையில் தான் கேட்டார்கள் என்பது விளங்கும்.

    இந்தியா பிளவுப்பட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களை இந்நாட்டை விட்டும் விரட்டி விட வேண்டும் என்ற தணியாத ஆசையால் அதனை ஏற்றுக் கொண்டனர்;  விரும்பினர் R.S.S காரர்கள். ஆனால் அவர்கள் விரும்பியது போல் இந்திய மக்களை இந்திய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக இந்நாட்டை விட்டும் சென்று விடவில்லை. இந்நாட்டிலேயே பிறந்து இந்நாட்டிலேயே வளர்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் பாடுபட்ட முஸ்லிம்கள் எப்படிப் போவார்கள்? அவர்களை விரட்ட யாருக்கும் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அதனால் ஏற்ப்பட்ட குரோத உணர்வே இன்றைய R.S.S காரர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல் கபட வேடமிட்டு புலம்புகின்றனர். 

சற்று சிந்தியுங்கள்!

    * மேற்க்குறிப்பிட்ட ஆதாரப் பூர்வமான நிகழ்ச்சித் தொகுப்புகளிலிருந்து நாம் என்னப் புரிகிறோம்?

    * பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் முஸ்லிம்களின் ஆட்சியில் வகுப்புக் கலவரம் எதுவும் நடக்கவில்லை.

   * இந்து – முஸ்லிம் கருத்து வேற்றுமையையும் குரோதமும் பிரிட்டிஷாரால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை.

    * முஸ்லிம்கள் இந்நாட்டைப் பிரிக்க முதலில் விரும்பவோ, திட்டமிடவோ இல்லை.

   * இந்து தீவிரவாதிகளும் அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொண்ட காங்கிரஸுமே இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணம்.

    எனவே இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் துர்ப்பிரச்சாரமே தவிர அதில் உண்மை ஏதுவுமில்லை.

தொடர் நிறைவுற்றது. 

Leave a comment