“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

“இந்திய விடுதலை வரலாறு”. சில மறைக்கப்பட்ட உண்மைகள். பகுதி – 10

தேதி : 29-09-2017

……………………………………..

10 – விடுதலைப்போரில் வீரமங்கையர்

ஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.

டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது  ஆங்கிலப் பெண் ஆல்ட்வெல் கூறியது. 

பேகம் ஹஜ்ரத் மஹல்

1857 இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய்,  மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

ஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர்  பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

1857 இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர்.  தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால்  அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்

1858 மார்ச் 6ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்து நாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் களத்தை விட்டு வெளியேறினார்.

பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார்.

தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை

வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம்

பேகம் ஹஜ்ரத் மஹல்லின் சம காலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி  நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய  மஹ்பர், 1858 ஜுன் 18  இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.

குமாரி அமாதுல் ஸலாம்

1938இல் ஹிந்து  முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடாயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த காந்திஜீயுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில்:

“என்னிடம் அறிவுக்கூர்மை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள்”  என்று கூறியவர் தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.

பீயம்மாள்

என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜிபானு என்ற பீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால்  நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு  அளித்து,  இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது. 

சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

இவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர்.

Leave a comment